புதன், 24 மார்ச், 2010

சத்துணவு

சில மாதங்களுக்கு முன் நான் காமராஜர் படம் பார்த்தேன். அதில் அவர் ஆரம்பித்த மதிய உணவு திட்டம் என் பள்ளி நாட்களை நினைவூட்டியது.

எங்கள் ஊர் கேங்கவரம், செஞ்சிக்கு அருகில் உள்ள ஒரு சின்ன கிராமம். எங்கள் ஊரை ஒட்டி உள்ள கணக்கன்குப்பம் என்ற கிராமத்தில்தான் பள்ளிக்கூடம் உள்ளது. ஒன்று பஞ்சாயத்து இடை நிலை பள்ளி, எட்டாம் வகுப்பு வரை இருக்கும். இரண்டவது RC ஆரம்ப பள்ளி, ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும். அடுத்து லூர்து அன்னை நடுநிலை பள்ளி, ஆறாவது முதல் பத்தாவது வரை இருக்கும்.

எல்லா இடங்களை போலவே பஞ்சாயத்து பள்ளியில் கண்டிப்பு இல்லாமல் இருக்கும். RC மற்றும் லூர்து அன்னை பள்ளிகூடங்கள், கிருஸ்துவ சபையினரால் நடத்தபடுவது என்பதால் ஒழுக்கம், படிப்பு எல்லாவற்றிலும் கண்டிப்பாக இருப்பார்கள். RC பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதில் சில கட்டுபாடுகள் இருக்கும். கையால் தலையை சுற்றி காதை தொடுவதை தவிர, மாணவனுடைய பெற்றோர்கள் கொஞ்சம் படித்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஊர் பெரியாளின் / படித்தவர்களின் சிபாரிசு இருக்க வேண்டும். இங்கு படித்தவர்கள் என்பவர்கள் கையெழுத்து போடும் அளவுக்கு படித்தவர்களாக இருந்தால் போதும். இப்பள்ளியில் சேர்த்துகொள்ளப்படாத மாணவர்கள் பஞ்சாயத்து பள்ளியில் சேர்க்கபடுவார்கள்.

பஞ்சாயத்து பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை நீங்கள் மறந்தேவிடலாம். ஒரு சிலரை தவிர மற்ற பஞ்சாயத்து பள்ளி மாணவர்கள் தகுதி அற்றவர்களாகவே பள்ளியை விட்டு வெளியே வருவார்கள். இந்த மாணவர்கள் மதிய உணவுக்காகவும் வீட்டில் பெற்றோர்களால் கவனிக்க முடியாது என்பதாலும் இங்கே சேர்க்கப்படுவர்கள்.

என்னோட பெற்றோர்கள் எங்களை படிக்கவைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதால் நான் RC ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்டேன். சேர்க்கப்பட்டேன் என்பதை விட அனுப்பப்பட்டேன் என்று சொல்லலாம். ஒரு நாள் ஒரு ஆசிரியர் (Paul) என் அப்பாவிடம் பொதுவான விஷயம் மற்றும் என் அண்ணனின் படிப்பு போன்றவற்றை பற்றி பேசி விட்டு என்னை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். என் அப்பா "இவன்தான் மதிக்க மாட்டேங்கறான். ஊர சுத்தி வந்துட்டு இருக்கறான்." னு சொல்ல. ஆசிரியர் "பையனக்கு வயசு என்ன இருக்கும், பள்ளிகூடத்துக்கு அனுப்பி வச்சுடுங்க" னு சொல்ல. அப்பா " நாலு வயசுதான் ஆகும்" னு சொல்ல. ஆசிரியர் "சும்மா அனுப்பிவிடுங்க நான் பாத்துக்கறேன்" னு சொல்ல. பள்ளியில் சேர்க்கபடாமலே பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டேன்.

எங்கள் வீட்டில் இருந்து வெளிவந்து வலது பக்கம் திரும்பி ரோட்டில் 100 மீட்டர் நடந்தால் ஒரு முருகர் கோவில் வரும். அங்கிருந்து வலது புறம் திரும்பி 100 மீட்டர் நடந்தால் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று இருக்கும். கோவிலையும் ஆலயத்தையும் இணைக்கும் வழி தடம் ஒரு நீர் நிலையின் (தாங்கல்) கரையை ஒட்டி அமைந்து இருக்கும். தாங்கல் கரையும் அந்த வழி தடம் ஓரமும் அந்த இடத்தை சுற்றி வசிக்கும் மக்களுக்கு காலை கடன் கழிக்கும் இடம். அந்த ஆலயத்தை ஒட்டி எங்கள் RC பள்ளிக்கூடம் அமைந்திருக்கும். அதுதான் எங்கள் பள்ளிக்கு செல்லும் வழக்கமான வழி.

சில மாதங்களுக்கு பிறகு அந்த ஆசிரியர் நான் ஒன்றாம் வகுப்புக்கு தகுதியானவன்தான் என்று நினைத்திருக்ககூடும். என் அப்பாவிடம் "பையன் எந்த மாதம் பிறந்தானு சொல்லுங்க ஒரு வருஷம் தள்ளி போட்டு சேர்த்துடலாம்" னு சொல்ல. ஒரு வருஷம் முன்னாடியே பிறந்தவன் போல பிறந்த தேதியை மாற்றி சேர்க்கப்பட்டேன்.

பள்ளிக்கு செல்லும் முன் வரை காலை உணவின் மீதி அல்லது கூழ் என்னுடைய மதிய உணவாக இருக்கும். மீதம் இருக்கும் நிலையில், முதலில் நாங்கள் மதிய உணவு சாப்பிடுவோம். இன்னும் மீதம் இருக்கும் நிலையில் என் பெற்றோர்ர்கள் சாப்பிடுவார்கள். பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகு மதிய உணவு என்பது பள்ளியில் மட்டுமே தரப்படுவது என்று நம்ப ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய பையில் புத்தகம், பலகை மற்றும் உணவு வாங்க தட்டு இது மூன்றும் இருக்கிறதா என்பதை சரிபார்த்த பிறகே பள்ளிக்கு செல்வேன்.

காலை இடைவேளையின் போதே சத்துணவு கூடம் அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் சேந்தி குடித்துவிட்டு, உணவு தயாரிக்க ஆரம்பித்து விட்டார்களா என்பதை ஒரு முறை தூரத்தில் நின்று (மாணவர்களுக்கு சத்துணவு கூடத்தில் அனுமதி இல்லாததால்) உறுதி செய்துகொள்வோம். சில நேரங்களில் சில திடமான மாணவர்கள் சமையலுக்கு தண்ணீரை கிணற்றில் இருந்து இறைத்து தருவார்கள். அவர்கள் திரும்பி வகுப்பறைக்கு வந்தவுடன் "நிறைய காய் வெட்டி வச்சிருக்காங்க. நானே 5 வாலி தண்ணி இழுத்து கொடுத்தேன். அவன் நாலு வாலி சேந்தி கொடுத்து இருப்பான். இன்னைக்கி சாதத்தில் நிறைய கொழம்பு கலந்து கொடுப்பாங்க. நீ வேனா பாரு" அடுத்தவன் "டாய் நான்தான் 5 நீ 4 வாலி தான்" என முனுமுனுப்பான சண்டைகள் போய்க்கொண்டு இருக்கும்.

மதியம் 12 மணிக்கு அடிக்கும் கோயில் மணி, மதிய உணவுக்கான நேரம் நெருங்கிவிட்டதை ஞாபகபடுத்திவிடும். கிராமம் என்பதால் மணி பர்ப்பதர்க்கான வசதி இருக்காது. இந்த கோவில் மணியும் பள்ளிக்கூட மணியும்தான் பெரும்பாலான கிராம மக்களுக்கும் மணிகாட்டி. 12:30 பள்ளிக்கூட மணிக்காக காத்துக்கொண்டு இருப்போம். ஆசிரியர்களும் 12 மணிக்கு மேல் கவனிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு கேள்வி பதில் அல்லது கதை சொல்வது என போய்க்கொண்டு இருக்கும்.

12:30 மணி அடித்ததும் மாணர்வகளை கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்த ஆசிரியர்களும் கட்டுபடுத்த மாட்டார்கள். அனைவரும் ஓடி சென்று உணவுக்கான வரிசையில் நிற்ப்போம். உணவை வாங்கிக்கொண்டு பள்ளியில் உள்ள வெப்ப மரங்களின் அடியில் உற்காந்து உணவருந்துவோம். காகங்களும் அதே நேரத்தில் எங்கிருந்தாலும் வந்து வெப்ப மரங்களில் குவிந்துவிடும். சிதறிய / மீர்ந்த உணவை அவைகள் தின்று பசி ஆற்றிக்கொள்ளும். ஆசிரியர்கள் உணவு வரிசையை கட்டுப்படுத்தவும் உணவு வீணாக்குபவர்களை தண்டிக்கவும் சுற்றிவந்துக்கொண்டு இருப்பார்கள். சாதத்தில் காய்கறி வந்தால் சந்தோஷத்தில் மனம் துள்ளும்.அதனை அனைவருடனும் காமித்து, அடுத்தவன் பொறாமைப்படுகிறான் என்பதை உறுதிசெய்துக்கொண்டுதான் சாப்பிடுவோம். எனக்கு பாதி என்று ஒருவன் கேட்பான். "நேத்து எனக்கு ரெண்டு வந்துச்சு" னு ஒருவன் சொல்லி சமாதானபட்டுக்கொள்வான்....

ஒருநாள் சத்துணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது ஒரு நண்பனின் தட்டில் காகத்தின் எச்சம் விழுந்துவிட்டது. அவன் அந்த பகுதி உணவை எடுத்து தரையில் வைத்துவிட்டு சாப்பாட்டை தொடர்ந்தான். அதனை கண்ட ஆசிரியர் அதட்டலுடன் அவனை நோக்கி வந்துக்கொண்டு இருந்தார். நண்பன் பயத்துடன் தட்டில் இருந்து எடுத்து தரையில் வைத்த உணவை ஒரு கையால் மறைக்க முற்பட்டுக்கொண்டிருந்தான். அருகில் வந்த ஆசிரியர் நண்பனிடம் " தட்டில் இருக்கும் உணவை கொட்டிவிட்டு சத்துணவு போடும் ஆயாவிடம் போய் வேற சோறு வங்கிக்கோ" என்று அனுப்பிவைத்தார். சத்துணவு ஆயாவிடம் போன நண்பன் நடந்ததை சொன்னான். சத்துணவு ஆயா "என்ன புள்ளப்பா நீ" என்று சொல்லிக்கொண்டே வழக்கத்துக்கு அதிகமாகவே உணவை அவன் தட்டில் இட்டார்கள். எப்போதும் கண்டிப்பாக இருப்பவர்கள் வழக்கத்துக்கு மாறாக நடந்துக்கொள்வதை அவனால் புரிந்துகொள்ள முடியாமல் சந்தோஷத்தில் திரும்பி வந்தான். ஒருவன் நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல அந்த வாத்தியார் நல்லவருனு. நண்பன் அந்த ஆயாவுந்தான் என சொல்ல.... எங்கள் உணவை தொடர்ந்தோம்.

ஞாயிற்றுக்கிழமை சத்துணவுகூடத்துக்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமை இரண்டு வகையான உணவு போடுவார்கள். 12 மணி மணி ஆலயத்தில் அடித்ததும் வீட்டில் இருந்து தட்டை எடுத்துக்கொண்டு செல்ல ஆயுதத்மாகிவிடுவோம். சத்துணவு தயாராகி இருந்தால் 12:30 க்கு
முன்னாடியே உணவு போட ஆரம்பித்துவிடுவார்கள். சனிக்கிழமை விடுமுறை என்பதால் உணவை வீட்டுக்கு எடுத்து வந்து வீட்டில் உண்ணுவோம். ஞாயிற்றுக்கிழமை நாங்களும் மதிய உணவுக்கு விடுமுறை விட்டுவிடுவோம். விளையாட்டு எங்கள் பசியை மறைத்துவிடும்.

ஒரு நாள் சனிக்கிழமை சத்துணவை வாங்கிக்கொண்டு கிருத்துவ ஆலயத்தை கடந்து தாங்கல் கரை ஓரம் உள்ள பாதையில் வந்துக்கொண்டு இருந்தேன். பாதையின் இருபுறமும் காலைக்கடன் சென்று நாச்தியாக இருக்கும் என்பதால் நடக்கும் வழி குறுகலாகவே இருக்கும். நானும் என் உணவை தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு வேகமாக நடந்தேன். என் எதிரில் சைக்கிளில் வந்த ஒருவன் வேகமாக என் மேல் ஏற்றி இருவரும் நிலை தடுமாறி விழுந்தோம். தவ்று அவனுடையது என்பதால் கூட்டம் கூடும் முன் அவன் எழுந்து சைக்கிளில் பறந்துவிட்டான். என் கண்ணீரின் வழியாக என் மதிய உணவு சிதறி கிடந்ததை பார்த்துக்கொண்டு மதிய உணவுக்கான வழி தெரியாமல் அழுதுக்கொண்டு இருந்தேன்.

என் நண்பன் ஒருவன் சத்துணவு ஆயாவிடம் கேள் திரும்ப தருவாங்க என்றான். இன்னொருவன் நண்பனுக்கு ரெண்டாவது முறையாக உணவு கிடைத்தது ஞாபகப்படுத்தினான். சத்துணவுகூடதுக்கு விரைந்தேன். சத்துணவுகூட அய்யாவிடம் நடந்ததை சொன்னேன். பதறிய பாட்டி எங்கே? என கேட்க, " தாங்கலான்ட போகும்போது வயத்துல வுட்டுட்டான் பாட்டி. சோறெல்லாம் அங்கயே கொட்டிக்குச்சு. அங்க ஒரே ..." என சொல்லிக்கொண்டிருக்கும் போதே என் சட்டையை துக்கி வயற்று வீக்கத்தை தெய்துவிட்டபடி " பாவி பய புள்ளைக்கு என்ன அச்சுனகுட பார்க்காம போயிருக்கான் பாரு"என்று சைக்கிள்காரனை திட்ட ஆரம்பித்தாள். அப்போது தான் நானும் என் வயிற்றில் பட்ட வாலியை உணர்ந்தேன். பாட்டி தட்டை கழுவி சாதம் போட்டு கொடுத்தாள். சாதத்தை சந்தோசமாக வாங்கிகொண்டு வீடு திரும்பினேன். நாண்பர்கள் ரெண்டாவது தடவையா சோறு போட்டங்களா, நான் தான் சொன்னன் இல்ல.... என்றனர்.

எங்கள் ஊர் மலையை ஒட்டி உள்ள லூர்து அன்னை உயர் நிலை பள்ளியில் நான் ஆறாம் வகுப்புக்கு சேர்ந்த பிறகு என் அம்மா எனக்கு மதிய உணவை ஒரு கப்பில் கொடுத்தனுப்ப ஆரம்பித்தனர். என் தந்தை இல்லாதவங்க சத்துணவு சாப்பிடட்டும் என்று விளக்கம் கொடுத்தார். என் அண்ணனும் அதே பள்ளியில்தான் படித்துக்கொண்டு இருந்தான். எனவே அவனோடுதான் மதிய உணவு சாப்பிட செல்வேன். அங்கு நிறைய பேர் மதிய உணவு வீட்டில் இருந்து கொண்டுவந்தார்கள். அப்போதுதான் தெரிந்தது RC பள்ளி ஊரினுள் அமைந்திருந்ததாலும் மதிய இடைவேளையும் அதிக நேரம் என்பதாலும் அங்கு படிக்கும்போது அவர்கள் மதியம் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வருவார்கள் என்று. என் பெற்றோர்கள் மற்ற பிள்ளைகளை பார்த்து தாழ்வாக எண்ணக்கூடாது என்பதற்காக எனக்கு மதிய உணவு கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். அண்ணனுடைய நண்பர்கள் வசதியானவர்கள் என்பதால் அனைவரும் வீடிலேருந்தே உணவு எடுத்து வருவார்கள். அவரவர் வசதிக்கேற்ப சாப்பாட்டு கப்பும் உணவும் இருக்கும். அங்கு சென்ற பிறகுதான் மதிய உணவை வைத்து அவரவர் வீட்டின் வசதியை பிரித்து பார்க்க முடியும் என்பதை உணர்ந்தேன்.

எனக்கும் சத்துணவுக்கும் இருந்த உறவு முறிய ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமைகளில் சத்துணவுடன் போடும் முட்டை என்னுடைய உறவை சற்று நீடித்தது. அன்று மட்டும் வரிசையில் நின்று முட்டையை மட்டும் வாங்கிக்கொண்டு வந்து வீட்டு சாப்பாட்டுடன் சாப்பிடுவேன். எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் (Michel bother) மதியம் தலைமை ஆசிரியர் அறையில் இருந்து தன்னுடைய அறைக்கு போகும் போது வழியில் தட்டை நீட்டும் அனைத்து மாணவர்கள் தட்டிலும் இருந்து கொஞ்சம் உணவு எடுத்து சாப்பிட்டுக்கொண்டே போவார். நானும் அந்த வரிசையில் என் உணவை நீட்ட வேண்டும் என என்னுவேனே தவிர அவருடைய சமத்துவத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடையவில்லை.

என்னுடைய ஒன்பதாம் வகுப்பு st.Ann's உயர் நிலை பள்ளி, திண்டிவனத்தில் தொடர்ந்தது. திண்டிவனம், எங்கள் ஊரில் இருந்து 50 km
தொலைவில் இருக்கும் என்பதால் நான் விடுதியில் தங்கி படிக்க வேண்டியதாகிவிட்டது. மூன்று வேலையும் விடுதியில் உணவு என்பதால் சத்துணவுக்கும் எனக்கும் இருந்த உறவு முற்றிலுமாக முறிந்தது.

சத்துணவு மட்டும் அல்லாமல் இலவச ஆடை (uniform)- வருடா வருடம் பண்டிகை காலங்களில் வீட்டை தவிர உடைகள் கிடைக்கும் இன்னொறு இடம் எங்கள் RC பள்ளியில்.

காலணி - என் பள்ளி பருவத்தில் பள்ளியில் வாங்கிய இலவச காலணியை தவிர வேறு காலணியை என் கால்கள் பார்த்தது இல்லை.

RC ஆரம்ப பள்ளி கல்வியை மட்டும் எனக்கு இலவசமாக கொடுக்கவில்லை என்பதால் என்னுடைய இன்னொறு வீடாகவே அது தெரிந்தது. அந்த சூழலை உருவாக்கியவர் பெருந்தலைவர் காமராஜர். காமராஜர், கிராம கல்வி முன்னேற்றத்திற்காக வரி அதிகம் விதிக்க முடிவெடுக்கும்போது , பலரின் ஆதரவை இழக்க வேண்டி இருக்கும் என்ற அபிப்ராயங்கள் கோரப்பட்டது. பரவாஇல்லை, கொடுக்க முன்வருபவர்கள் கொடுக்கட்டும், ஏழை மக்களின் கல்விக்காக நான் வீதியில் இரங்கி கை எந்துகிறேன் என்பது அவரின் பதிலாக அப்போது இருந்தது. அன்று அவர் எடுத்த தீர்க்கமான முடிவுகள் சலுகைகளின் பலனை என்னை போல கிராமத்து மாணவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.

சலுகைகளின் பலன் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என எண்ணுபவன் நான். காமராஜரின் சலுகைகள் பல தலைமுறைகளை மாற்றி அமைத்துள்ளது.

ref : http://www.perunthalaivar.org/achievement/edu-achievement/

1 கருத்து:

Unknown சொன்னது…

Sridhar..nalla article. Peru kettalum parava illai, naladhu seiya ninaitha thalaivargal enga irundhu irukanga. hmm..ippo irukira nilamaiku thalaivargal karanama illa makkal karanamanu theriyala..